04 December 2016

செந்தமிழ்க்கவசம் (ஐ. உலகநாதன்)

அகர முதலே அமுதத் தமிழே,
அணியே மணியே அறிவார் கலையே,
பகரச் சுவைதரும் பைந்தமிழ்ப் பாலே,
பாடற் பொருளே பணிந்தேன் வருக!

மாசறு வானத்து மழையே வருக!
பேசரும் இலக்கியப் பேழைநீ வருக!
அவ்வைக் கருளிய அருங்கனி வருக!
கொவ்வைச் செவ்வாய்க் குயிலே வருக!

ஆழ்கடல் முத்தே ஆனிப் பொன்னே,
சூழ்இருள் நீக்கும் சுடரே வருக!
அடிவரை இனிக்கும் அணிபெறும் கரும்பே,
முடிவரை மணக்கும் முதலே வருக!

எழுத்தசை சீர்தளை அடித்தொடை எனவரும்
பழுத்தசொற் பதமே வருக!
எதுகை மோனை எனவரும் யாழே,
மதுவைப் பிழியும் மலரே வருக!

மனம்வரை குளிரும் பனிவிழும் மலையே
கனிவளம் பெருக்கும் கடலே வருக!
மன்னர் கவரி வீசிய மயிலே,
தென்னவர் போற்றிய திருவே வருக!

மனப்புண் ஆற்றிடும் மருந்தே வருக!
வினைப்பயன் செய்யும் விருந்தே வருக!
நெஞ்சில் உலவும் நிலவே வருக!
கொஞ்சும் சீரடி குலுங்கிட வருக!

தொட்டில் பாட்டின் தொடரே வருக!
வட்டில் நிரப்பும் வயலே வருக!
தென்றலில் ஆடும் தேரே வருக!
குன்றத் தருவிக் கொடியே வருக!

தேனின் பெருக்கே தெளிவே வருக!
வான்வரை உயர்ந்த வடிவே வருக!
மகனைக் காக்க மழையாய் வருக!
மனதைக் காக்க மருந்தாய் வருக!

வழிமுறை யின்றி வன்முறை யாலே
அழிமுறை வளர்ப்பார் ஆவியைப் போக்கு
விளம்பர மின்னலில் வெளிச்சம் போட்டு
நலம்கெடும் மனிதரை நரிக்கிரை யாக்கு

காசு படைத்தவன் கையில் உலகை
மாசு படுத்தும் மாந்தரை மாற்று.
பதுக்கல் பேர்வழி பார்வையில் பட்டால்
ஒதுக்கப் படும்வரை ஊருடன் போரிடு

நாட்டை விற்கும் நரிகளைக் கண்டு
காட்டிக் கொடுத்துக் கழுவினில் ஏற்று;
வஞ்சப் பகைவர் நெஞ்சைப் பிளந்து
கொஞ்சும் தமிழினக் கொடியினை ஏற்று

அரசியல் பெயரால் அழிவுகள் செய்வார்
துறைதொறும் ஊழல் துணிவுடன் செய்வார்,
அறவழி மாற்றிப் புறவழி போவார்
கறைபடு மனத்தார் கால்களை வெட்டு

வெட்டு வெட்டு வீணரை வெட்டு
கட்டு கட்டு கயவரைக் கட்டு
குத்து குத்து கொடியவரைக் குத்து
மொத்து மொத்து முகத்தினில் மொத்து!

உழைப்பவர் மிகப்பலர் பிழைப்பவர் ஒருசிலர்
உடனே மாற்று உழைப்பினை ஏற்று!
மரத்தை நட்டவன் மண்ணில் கிடப்பதும்
உரத்தைப் போட்டவன் உள்ளம் துடிப்பதும்

நீரை வார்த்தவன் நெஞ்சம் வெடிப்பதும்
ஊரை ஏய்ப்பவன் உயர்கனி பறிப்பதும்
மாறிட வேண்டும் மாற்றுதல் உன்கடன்
மானிடம் தழைக்கப் பேணுதல் உன்கடன்!

சாதியின் பெயரால் சண்டைகள் வளர்ப்பார்
சாமியின் பெயரால் மண்டைகள் பிளப்பார்
மோதி மிதித்தவர் முகத்தைத் தகர்த்திடு
நீதி பிழைத்திட நேர்வழி வகுத்திடு!

தாய்க்குலம் தன்னைச் சருகெனும் ஆளை
நாய்க்குலம் என்று நறுக்கவன் வாலை!
கைம்பெண் எனஒரு பைம்பொன் கருகும்
பொய்ம்மைக் கட்டினைப் பொடிப்பொடி யாக்கு
கன்னிக் கரும்பினைக் கடிக்கத் துடிப்போர்
பொன்பொருள் கேட்டால் புழுதியில் தள்ளு
கொண்டவள் வாட கண்டவள் பின்செல்லும்
வண்டுகள் சிறகைத் துண்டம் ஆக்கு

தந்தவள் ஒருபெண் வந்தவள் ஒருபெண்
இந்தச் சிந்தனை எவர்க்கும் வரச்செய்!
காதள வோடிய கண்ணைப் பாரார்
சீதள நிலவின் செழுமையைப் பாரார்

யாரெவர் எனினும் எளிதில் விடாதே
ஊரவர் கூடி உமிழ்ந்திட நிறுத்து!
காதலி என்று கதைகள் உரைத்து
தீதுகள் புரிவார் செயலைத் திருத்து!

பயிற்று மொழியாய்ப் பைந்தமிழ் இல்லாப்
பள்ளிகள் கள்ளிகள் பாய்ந்ததை மூடு
உயிர்த்தமிழ் இல்லா உரைநடை ஏடுகள்
பயிரிடை களைகள் பறித்ததைக் கிழித்தெறி

ஆட்சி மொழியென அருந்தமிழ் இல்லா
காட்சியை மாற்றிட ஆட்சியை மாற்று!
வண்ணத் தமிழில் வடமொழி கலப்பார்
சின்னத் தனத்தை ‘சீ’யெனத் துப்பு

பச்சைத் தமிழைக் கொச்சைப் படுத்தும்
எச்சில் வாய்களை எரிதணல் ஆக்கு
தாங்கிடும் தமிழில் ஆங்கிலம் கலப்பார்
தூங்க விடாதே தூள்தூள் ஆக்கு!

மனைப்பெயர் அனைத்தும் மணித்தமிழ் இலையேல்
அனைத்தையும் உடனே அடியொடு நொறுக்கு
கடைப்பெயர் எல்லாம் கனித்தமிழ் இலையேல்
உடைத்து நொறுக்கு ஒன்றையும் விடாதே!

தெருப்பெயர் எல்லாம் தீந்தமிழ் இலையேல்
நெருப்பினில் போடு நிமிரட்டும் நாடு
தமிழர் திருப்பெயர் தமிழ்என் றாக
தனியாய் அதற்கொரு சட்டம் போடு

யாவரும் தமிழை எளிதாய்க் கற்க
எழுத்தைச் சுருக்கு எண்ணம் பெருக்கு!
பாவலர் படைப்பின் திறத்தைப் பார்த்து
பரிசுகள் வழங்கும் பட்டயம் வழங்கு!
உயர்ந்த படைப்புகள் உலக மொழிகளில்
பெயர்க்கப் படுவது பெரிதினும் பெரிது.
பொய்யா மொழிபோல் பொன்மொழி படைத்தால்
மெய்யறிந் தவரை மேனிலைப் படுத்து

அன்றைய இலக்கிய ஆற்றல் உரைப்போர்
இன்றைய இலக்கியம் ஏற்றம் உரைக்கவும்
அன்றும் இன்றும் அதனதன் தரத்தில்
ஒன்றுக் கொன்று ஒப்பியல் காணவும்

தூண்டுக எம்மைத் தூண்டித் தூண்டித்
தாண்டுக பழமை தாண்டித் தாண்டித்
தோன்றுக புதுமை தோன்றித் தோன்றி
ஊன்றுக புகழ்க்கொடி ஊன்றி ஊன்றிப்

புதுத்தமிழ் உலகை உலகம் காண
விதிமுறை செய்க வெற்றிகள் பெருக!
வானொலியில் தமிழ்த் தேனொலி வழங்கு
வடமொழி ஆங்கில வசைமொழி விலக்கு

ஆன மட்டிலும் அறவழி கூறும்
அரிய நிகழ்ச்சிகள் புரிய வழங்கு
கோணலை நீக்க குறள்நெறி பரப்பு
கொலையுறும் கலைகளின் குமுறலை நிறுத்து

இயலிசை நாடகம் எங்கும் எதிலும்
அயல்மொழி கலப்பை அறவே நீக்கு
உயர்தொலைக் காட்சியில் உட்பொருள் உயர்த்து
முயற்சிகள் அனைத்தும் முத்தமிழ் விதைத்து!

நிறைவுறு பண்புடன் நேர்தமிழ் இல்லாத்
திரைபடச் சுருளைத் தீக்கிரை யாக்கு
நாளேடு எல்லாம் நற்றமிழ் ஏந்த
சூளுரை செய்து தூய்மைப் படுத்து

கொச்சைத் தமிழில் கொணரும் இதழ்கள்
அச்சே றாமல் அப்புறப் படுத்து.
புத்தகம் என்னும் பெயரில் குப்பைகள்
மெத்தவும் கொணர்வர் குப்பையில் போடு

எவனும் எழுதலாம் எதையும் எழுதலாம்
என்னும் கொடுமையை இன்றே மாற்று
எவன்தான் எழுதலாம் எடையைப் போடு
எடையில் லார்க்குத் தடையைப் போடு!
ஆளைப் பார்த்து நூலை அளப்பார்
வேலைக் கெல்லாம் வேலியைப் போடு
பணத்துக் காகப் பதவிக் காக
பாராட் டுரைப்பார் பட்டியல் சாடு

சங்கம் மன்றம் தழுவிய அமைப்புகள்
சான்றோர் தம்மைச் சார்ந்து செயல்பட
எங்கும் தமிழாய் எதிலும் தமிழாய்
இயக்கம் தோறும் எழிலுறு தமிழாய்

உள்ளம் தோறும் உணர்வினை ஊட்டு
வெள்ளம் போலே வினவுகள் கூட்டு
இசையரங்கு எல்லாம் இன்றமிழ் இன்றி
வசையுறு பிறமொழி வராமல் நிறுத்து

நாடக அரங்கில் நற்றமிழ் இன்றி
நலிவுறும் பிறசொல் நறுக்கேன் நமக்கு?
மேடைத் தமிழில் மேன்மைத் தமிழ்வர
ஓடைப் புனலென ஊறுக ஊறுக!

என்ன தமிழென ஏளனம் செய்வார்
தன்னைத் தூக்கித் தரையில் மோது!
சோறு போடுமா தமிழெனக் கேட்டு
கூறு போடுவார் கூனலை மாற்று

மரபுகள் மாற்றி மனங்களை மாற்றித்
திரையிடும் புதுக்கவிதை சிறுவரை விரட்டு!
எறும்புக்கு உருவம் யானைக்கு உருவம்
இதுஇது இதுவென இருந்திடும் போது

வரும்புதுக் கவிதை வடிவம் இன்றி
வார்த்துத் தீர்க்கும் வம்பரைத் திருத்து
பொருள்படைத் தவர்கள் பொன்தமிழ் காக்க
அருள்படைத் தவராய் அறம்செய வரட்டும்

இருளில் கிடக்கும் எழுத்துகள் யாவும்
உருப்பெற நூலாய் உயர்வுறத் தரட்டும்
தமிழன் என்றால் தமிழுக் காக
தகுபொருள் உடனே தருதல் வேண்டும்

தமிழன் என்றால் தமிழை வளர்க்கும்
தக்கவர் தம்மைத் தாங்கிட வேண்டும்.
தமிழன் என்றால் தமிழின மானம்
தானாய்க் குருதியில் தங்கிட வேண்டும்!
தமிழன் என்றால் தமிழன் ஆகவே
தரணியில் வாழும் சான்றுகள் வேண்டும்!
எவனோ வருவான் எதையோ சொல்வான்
இவனும் அவன்பின் இளித்துக் கிடப்பான்

எவனோ வருவான் எதையோ செய்வான்
இவனும் அவன்பின் இழிவாய் நடப்பான்!
இவனா தமிழன்? இதுவா தமிழ்நெறி?
இவனா தமிழன்? எவன்தான் மதிப்பான்?

இந்த இழிநிலை இன்றே மாற்று
கந்தல் தமிழனை கழுவினில் ஏற்று
தானே தமிழாய்த் தமிழே தானாய்
தேனாய்ப் பேசித் தெருவில் விற்பார்.

வணிகப் பொருளாய் மணித்தமிழ் மாறும்
பிணிச்செயல் புரிவார் பிழைத்தலைக் கொய்தெறி
தமிழ்நலம் வளர்ப்பார் தம்மையும் தடுப்பார்
பொன்பொருள் குவிப்பார் கண்போல் தமிழை

புரக்கும் புலவரை சிறக்கச் செய்யார்
பொருளில் ஒருதுளி புலவர்க் கீயார்
இருளில் இருளென இருந்திடச் செய்வார்,
வேலே இருப்பவன் மேலவன் என்றால்

கீழே இருப்பவன் கீழவன் என்றால்
காலித்தட்டு வேலே இருப்பதும்
காய்கறிக் கட்டு கீழே இருப்பதும்
துலாக்கோல் தன்னில் தூக்கிக் காட்டு

நிலாவையும் இருளையும் நிறுத்திக் காட்டு!
வல்லடி வழக்கில் வம்புகள் அளப்பில்
மெல்லும் சொற்களை மேன்மைக் கவியென
சொல்லித் திரிவார் தூயநற் புலவரை

கொள்ளியில் எறிவார் கொடியவர் தீயிடு!
காசு கொசுத்து மாலைகள் பெறுவார்
கையொலி எழுப்பிட ஆளைப் பிடிப்பார்
மாசு படுத்துவார் மாத்தமிழ் உலகை

மன்னிக் காதே மண்ணில் வீழ்த்து!
சங்கம் வைத்துச் சாதியை வளர்ப்பார்
சாதிக் கொன்றாய் நீதி வகுப்பார்
அங்கே ஒருவனை அறிஞன் என்பார்
அடுத்தவர் எவரையும் அடுத்தே வாரார்
கோடு கிழித்துக் குழுக்களை அமைப்பார்,
கோட்டுக் குள்ளே பிறர்வரப் பாரார்
நாடு பழிக்க நடக்கும் கொடுமை

நாறும் உலகை மாறும் படிசெய்!
முண்டி யடித்து முன்னே செல்பவன்
முதிர்ந்த அறிஞன்; மூலையில் கிடப்போன்
தண்டமிழ் தேர்ந்த சான்றோன் ஆயினும்

தழுவி அவனைத் தாங்கிட வாரார்
இந்த நிலைமை மாறிட வேண்டும்
இனிய தமிழ்அரங் கேறிட வேண்டும்
எந்த நிலையிலும் ஏற்புடை யாரை

இனம்காண் அதனை எடுத்துக் காட்டு!
வீணையைப் புழுதியில் வீசுதல் சரியா?
விளக்கி எடுத்து மீட்டுக மீட்டுக!
மோனை முத்தமிழ் முகம்புதைத் திருப்பதா?

முழுஉல கறியக் காட்டுக காட்டுக!
வானியல் மண்ணியல் வளமரியல் யாவும்
தானியல் பாய்வரும் தமிழியல் நிறுவு
அழகியல் தமிழில் அறிவியல் சொற்கள்

வழக்கியல் ஆகிட வழங்கி முழங்கு
பாவா ணர்வழி பைந்தமிழ்ச் சொற்கள்
நாவா டத்தரும் நலமெலாம் செய்க!
பாரதி பாரதி தாசன் படைப்பென

சீருறப் படைப்பார் சிறப்புறச் செய்க!
பாவரசு என்று பலபெயர் புனைவார்
யாவரசு என்பதை எடையிட முனைக
கூடை நூல்களைக் கொண்டு கொடுப்பார்

பாடநூல்எது பார்த்ததை இடுக!
பரிந்துரை யாலே பாழ்படும் தமிழை
புரிந்துரை செய்து புதுமைகள் நாட்டு!
நெருப்பிலும் நீரிலும் போனது போக

வெறுப்பிலும் தமிழ்மொழி வீழுதல் முறையா?
விருப்பு வெறுப்பினை விலக்கித் தமிழின்
சிறப்பை மட்டுமே செயலில் கொணர்க
உலகினை ஆண்ட உயர்தனிச் செம்மொழி
கலகப் பகையால் கவிழ்தலைக் காண்க!
இனப்பகை யாலே எழில்தமிழ் அழிப்பார்
மனப்பகை இன்றே மாறுதல் வேண்டும்
தமிழ்மொழி பிறமொழி தழைத்திடத் தடையா?

அமிழ்தை நஞ்சென அகற்றுதல் முறையா?
தமிழைப் பேசிட தமிழில் பாடிட
தமிழ்வழிக் கன்னடர் தடையாய் நிற்பதா?
கன்னித் தமிழும் கன்னட மொழியும்

பின்னிப் பிணைந்தவை பிரிவினை எதற்கு?
மொழிகளுக்கு அப்பால் முளைத்தமெய்ப் புலவன்
மொழிகளுக்கு அப்பால் முளைத்தமெய்ப் புலவன்
உலகப் பொதுமறை ஓதிய மேலோன்

வள்ளுவன் சிலைக்கும் வல்லடி வழக்கா?
குள்ள மனங்களைக் கொளுத்துக கொளுத்துக!
செந்தமிழ் மொழியின் சீர்மையை வாய்மையைத்
திருக்குறள் ஒன்றே தெளிவு படுத்தும்

இந்த நிலமெலாம் எடுத்துரை செய்க,
எதிர்ப்பவன் எல்லாம் ஏற்றிடச் செய்க!
நல்லன விட்டு அல்லன மட்டும்
சொல்லும் வாய்களை சுக்குநூ றாக்கு

மலரும் வெளிச்சம் மறுக்கும் இருட்டை
புலரும் பொழுதில் பொசுக்கிப் போடு
உண்மை உணரார் உணர்ந்தும் உரையார்
புன்மை மனத்தார் புல்லெனத் தள்ளு

ஒல்லும் வகையில் உயரிய முறையில்
தெள்ளிய தமிழ்வரத் திரைகளை அகற்று!
அறுவைகள் நீங்க அழகுத் தமிழ்முன்
குறுக்குச் சுவர்களைக் குப்பையென் றாக்கு!

நட்ட கனிமரம் நாற்புறம் பயன்பெற
எட்டி மரங்களை வெட்டிப் போடு
வற்றா ஆறுகள் வளங்களைச் செய்க
சுற்றிலும் சாக்கடைச் சுழலா? தூர்த்திடு!

அறிவில் சிறந்தும் ஆயிரம் இருந்தும்
பரிவில் லாதார் பதரெனத் தூற்று!
பிறப்பார் எல்லாம் இறப்பது உண்மை
நிலைப்பவர் யாரென நினைப்பவர் சிறப்பார்.
பிறந்தவர் உலகில் சிறந்தவர் ஆனால்
மறப்பவர் யாரென மதிப்பவர் உயர்வார்!
இதனை அறியார் இருந்தால் என்ன?
இறந்தால் என்ன இடறித் தள்ளு!

புதுமைத் தமிழைப் போற்றார் மாற்றார்
போலித் தமிழர் புற்றுப் பாம்புகள்
தோலை உரித்துத் தொங்கப் போடு
வாலை அறுத்து வாரிப் போடு

குப்பையைக் கிளறும் கோழிப் புலவர்
குண்டு மணிகளா கண்டு பிடிப்பார்?
தொப்பையை நிரப்பித் தொலைந்த புழுக்களை
தோண்டி எடுப்பார் ‘தூ’வென் றுமிழ்வாய்!

பாடல் நெருப்பில் மூடச் சருகுகள்
வாடிக் கருகிட வண்ணச் சிறகடி!
காலம் அளந்து காலடி அளந்து
கடமை செய்வார் கைகளை உயர்த்து

ஞாலம் போற்றும் நற்றமிழ்ப் பாடி
நடைமெலிந் தாரை நாளும் உயர்த்து!
ஒருகை தட்டின் ஓசை வராது
இருகை தட்டு இசையே எழுப்பலாம்

ஒற்றுமை இருந்தால் உயர்ந்து காட்டலாம்
பற்றுடன் இந்நிலை படைத்துக் காட்டு!
ஒருமைப் பாட்டின் பெருமையைக் குலைத்துச்
சிறுமைகள் செய்வார் செயலைத் தூக்கிடு

தோப்பு மரங்களைத் துண்டு போடுவார்
மோப்பம் பிடுத்ததை முளையில் களைக!
தமிழைப் பயிலான் தமிழன் இல்லை
தமிழைப் பேசான் தமிழ் இல்லை

தமிழை நினையான் தமிழன் இல்லை
தமிழைக் காவான் தமிழன் இல்லை
இத்தனைச் செயலும் எவன்செய் தாலும்
இதிலே ஒன்றினை எவன்செய் தாலும்

அத்தனைப் பேரையும் அணுகிப் பார்ப்பேன்
அவனே தமிழன் என்றறி விப்பேன்
தேம்பா வணியெனும் நீம்பால் தந்த
பூம்பா வலனைத் தமிழ்மகன் என்பேன்
ஒப்பியல் இலக்கணம் உரைத்த கால்டுவெல்
தப்பாத் தமிழ்மகன் தவறிதில் உண்டா?
இப்படித் தமிழனை இனம்பிரித் தூன்று
இதுதான் தமிழன் என்பதன் சான்று!

படைப்புக் காக உழைப்புக் காக
பரிசுகள் வழங்கும் பான்மையை ஊக்கு
அரிப்புக் காக புத்தகம் போடும்
வெறியரை நிறுத்தி விரல்களை வெட்டு

துணுக்குகள் எழுதி தொகுத்துப் போடும்
துணிச்சல் வருவது பிணிச்செயல் அலவோ?
பணம்பா ழாக தாள்பா ழாக
மனம்பா ழாக வருவது நூலா?

நூல் வெளியீடா பாழ்வெளி யீடா?
ஆளுக்கு ஆளிதைச் செய்வதை நிறுத்து!
புத்தகம் வெளியிட அருகதை என்ன?
பொழுதும் பொருளும் இருந்தால் போதுமா?

எத்தகு கொடுமை யார்இதைத் தடுப்பது?
இதற்கொரு வழிமுறை இன்றே காட்டு!
ஆன்றோர் அமைப்பின் பார்வையில் வைத்துச்
சான்றுகள் பெற்றவன் நூல்வெளி யிடலாம்

என்னும் கட்டளை இன்றே பிறப்பி
இன்றேல் தமிழ்கெடும் இதுஎன் அச்சம்!
பணத்தைக் கொடுத்தால் முனைவர் பட்டம்
பாவலர் நாவலன் பற்பல பட்டம்

கணக்கில் லாமல் கடைகளில் கிடைக்கும்
காலக் கொலைகள் கழுத்தை நெரிக்கும்
பட்டம் பெறவும் பட்டம் தரவும்
திட்டம் ஒன்று தெளிவுறத் தீட்டு!

தெய்வத் தமிழ்த்திரு வாசகம் இருக்க
பொய்வைத் தொருமொழி பூசனை மொழியாம்!
குளிர்தமிழ் மொழிவழி பாடு நடந்தால்
கோவிலில் தெய்வம் கொலுவிருக் காதா?

குறைமுறை யிட்டால் காது கேட்காதா?
கோலத் தமிழ்ச்சொல் பொருள்புரி யாதா?
தமிழ்வழி பாடு தடையற நடத்து
தவிர்த்தால் கோவிலைத் தகர்த்துப் போடு
அமிழ்தினை வேண்டா ஆண்டவன் வேண்டாம்
அவனடியார்கள் கூட்டமும் வேண்டாம்!
தமிழனும் தமிழனும் தமிழில் பேசிட
தடைவிதித் தார்யார்? தலைகொழுப் பலவோ

தமிழா இதுஎன்ன தமிழா? எனும்படி
தவித்திட ஆங்கிலச் சரங்களைத் தொடுப்பார்
தத்துப் பித்தெனத் தாண்டும் நடையில்
பத்து விழுக்காடு தமிழ்இருக் காது

சென்னைத் தமிழென ஒருதமிழ் உண்டு
பின்னும் கேடு பிழைகளின் கூடு
கற்களைப் போலவே சொற்களின் கலப்பு
அற்புதக் கவலை அதையேன் சொல்ல?

நாட்டில் இப்படி! வீட்டில் எப்படி?
கூட்டிக் கழித்தால் குளறும் தமிழே
அம்மா அப்பா அடியோ டில்லை
மம்மி டாடியாய் மாறிப் போனார்

இந்த நிலையில் என்தமிழ் இங்கே
அந்தோ மறையுது அவலம் அவலம்!
உலகத் தமிழர் ஒன்றாய் இணைந்து
நிலவும் கொடுமைகள் நீங்கிட வேண்டும்

சிந்தனை புதிது செயல்புதி தாக
செந்தமிழ்க் கவசம் முந்துற அணிக!
அடைக்கலம் தாயே அடைக்கலம் அடைக்கலம்
அடைக்கலம் தமிழே அடைக்கலம் அடைக்கலம்

படைக்கலம் தந்தெனை பாலித் தருள்க
பகைபுலம் பொடிபட பரிந்தெனக் கருள்க!


                                                முற்றும்